அஞ்சாதே – விமர்சனம் பிப்ரவரி 24, 2008
Posted by M Sheik Uduman Ali in Reviews.Tags: anjathe, அஞ்சாதே
2 comments
மாறுபட்ட அணுகுமுறை, தெளிவான திரைக்கதை மற்றும் கூரிய கண்ணோட்டம் என
அசத்தலான ஓபனிங்குடன் ஆரம்பிக்கிறது அஞ்சாதே.
இயக்குநர் மிஷ்கினுக்கு பாராட்டுகள்:
- திரைக்கதையில் கதாபாத்திரங்களை எந்தளவு அணுக வேண்டுமென்ற வரையறைக்குள் நின்றதற்கு (மிகைப்படுத்தப்படாத ஹீரோ மற்றும் வில்லன்).
- காம்ப்ரமைஷ் செய்து கொள்ளாத தெளிவான ஸ்கீரின்பிளே.
- “வேட்டையாடு விளையாடு“ மாதிரி இசையாலோ, வன்முறை காட்சிகளாலோ வம்படியாக ஆடியன்ஸை பயமுறுத்தாமல் மிரட்டிய தொனி.
- மகா மெகா டெக்னாலஜி ஐயிட்டங்கள் இல்லாமல் இருப்பதை பயன்படுத்தி பிரமிக்க வைத்த அழகு.
- எஸ்பிபி சாயலில் அழகான இவரது குரல் (அச்சம் தவிர் பாடல்)
போலீஸ் வேலையே லட்சியம் என வாழ்பவன் ஒருவன், பொறுக்கித்தனமாக ஊர் சுற்றுபவன் ஒருவன் என இரு நண்பர்களின் வாழ்க்கைப் பாதையை காலமும், ஒரு பெண்கள் கடத்தும் கும்பலும் புரட்டிபோடுவது தான் கதை.
ஹைடெஸிபலில் கத்துவது, கங்காரு குட்டி மாதிரி ஓடுவது தவிர “நரேன்” கவனிக்கத்தக்க டைரக்டர்ஸ் சாய்ஸ் ஹீரோ. சப்-இன்ஸ்பெக்டர் ஆன முதல் நாள் அனுபவம், ஆஸ்பத்திரியில் ரவுடிகளை வரிசை கட்டி அடிப்பது, பொன்வண்ணன் குழுவில் ஒரு புது இன்ஸ்பெக்டருக்கே உரிய அடக்கத்துடனும், துணிச்சலுடனும் நடந்து கொள்வது என அவ்வளவு நேர்த்தி.
சரியான பாத்திரத் தேர்வில் விஜயலட்சுமி. அன்னியோன்யமான நடிப்பு. எம்.எஸ்.பாஸ்கருக்கு இந்த படம் ஒரு நல்ல துருப்புச்சீட்டு. பொறுப்பான அப்பாவாக குணச்சித்திர ரோலில் மிளிர்கிறார்.
குங்குமப் பொட்டு வைத்து வொயிட் அன்ட் வொயிட் கெட்டப்பில் கடத்தல் கும்பலின் காட்பாதராக பாண்டியராஜனா இது! “ரான்ஸம்“ பேசுகிற வாக்கில் அசால்ட்டாக பாட்டிலை எடுத்து ஒருவனின் மண்டையை பொளக்கிறார். ஆழமான ஒரு ஆளாக இவரை பிரதிபலித்த விதம் அருமை. இன்னும் மெனக்கெட்டால் வெரைட்டியான ரோல்கள் நிறைய வரலாம். கடத்தல் கும்பலின் மாஸ்டர் மைன்டாக வரும் பிரசன்னாவின் புறத்தே “காக்க காக்க“ பாண்டியா, “பொல்லாதவன்“ பாலாஜி இவர்களை மிமிக்ரி பண்ணியது மாதிரி இருப்பதால் அகத்தே தோன்றும் இவரின் நடிப்பு அபேலாகிவிடுகிறது.
நட்பு காட்டும் இடங்களிலும் வெறுப்பு, பொறாமை கொள்ளும் இடங்களிலும் உணர்வுகளை அழகாக பிரதிபலித்து நடித்திருக்கிறார் நரேனின் நண்பனாக வரும் புதுமுகம் அஜ்மல். இவர்கள் வீட்டு ஏரியாவில் வசிக்கும் “குருவி“யின் கேரக்டர் மனதில் நிற்கும் ஒன்று.
ஆரம்பக் காட்சியாக வானத்தை வட்டமிடும் காமிராவின் ஓரத்தில் “கீழே இறங்குடா“ என அணிசேரும் குண்டர்கள், பாரில் தண்டால் எடுக்கும் அஜ்மலை தலைக்குப்புற எடுக்கும் காமிரா என ஆடியன்ஸிற்கு பாத்திரங்களின் கோணங்களை கூட அருமையாக புரிய வைத்திருக்கிறார் சினிமாட்டோகிராபி பண்ணியிருக்கும் மகேஷ் முத்துச்சாமி. மெல்லிய மஞ்சள் வெளிச்சத்தில் அஜ்மல் வீட்டில் பதுங்கும் பாண்டியராஜன் & கோ, தற்செயலாக வரும் விஜயலட்சுமி இவர்களின் நடவடிக்கைகளை காலடிகளை மட்டுமே காட்டி எடுத்த விதம் மாறுபட்ட அணுகுமுறை.
தனக்கென தனிப்பானியில் இசைக்கோப்பு செய்து பாடல்களிலும் பின்ணணி இசையிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார் சுந்தர் சி பாபு. சித்திரம் பேசுதடிக்கு பிறகு இது இரண்டாவது படமா என்ன? இதற்குள் வாய்ப்புகள் குவிந்திருக்க வேண்டுமே?!. கபிலனின் நிறைவான வரிகளில் “கத்தாழை”, “கண்ணதாசன் காரைக்குடி” பாடல்களின் கோரியோகிராபியும் எடுத்த விதமும் பிரமாதம். சடகோபன் ரமேஷின் படத்தொக்குப்பில் ஸ்லோவான பிளேயில் எடுக்கப்பட்ட பின்பாதி பரீட்சார்த்த முயற்சிக்கு பாராட்டலாம். அந்த மொட்டை மண்டையை கடைசி வரை காட்டாமலேயே காட்சிகளை நகர்த்திவிடுகிறார்கள்.
ரோட்டில் வெட்டுப்பட்டு கிடக்கும் ஒருவன், அவனை காப்பாற்ற முயலும் நரேனின் பதபதைப்பு; ஒரு போலீஸ் ஸ்டேஷனின் அன்றாட நடவடிக்கைகள், ஒரு புது சப்-இன்ஸ்பெக்டருக்கு கிடைக்கும் சின்ன சின்ன அவமானங்கள், கோயில் கும்பாபிஷேகம் அன்று இருட்டில் விஜயலட்சுமியிடம் தவறாக நடந்து கொள்ளும் பிரசன்னா; ஒற்றை கைலியுடன் ரோட்டில் கூனிக்கிடக்கும் மகளை ஓடி அணைக்கும் அப்பா மற்றும் ஹீரோவின் பதட்டம்; கரும்புத் தோட்ட்த்தில் வில்லன் & கோ, ஹீரோ இவர்களுக்கிடையேயான போராட்டம் என படம் நெடுக காட்சிகளை ஆணித்தரமாக புரியவைக்கும் கூரிய அணுகுமுறையில் ஒரு மாறுபட்ட தரமான சினிமாவை தந்திருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். ஒரு விஷ்வல் மீடியத்தை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு இந்தப் படம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
தமிழின் தி பெஸ்ட் ஆக் ஷன் சினிமா என்று கூறலாம் என்றால்; வித்தியாசமான அணுகுமுறை என்ற பெயரில் முன்பாதியில் ஆக் ஷனிற்கு அருமையான சிவப்புக் கம்பளம் விரித்த இயக்குநர் பின்பாதியில் கோட்டை விட்டிருக்கிறார். காக்க காக்க சாயலை தக்கணூன்டு அள்ளித் தெளித்து பாண்டியராஜனை கொல்வது முதல் கணிக்கக் கூடிய திருப்பங்களில் நகர்கிறது பின்பாதி. நாம வந்த வேலை முடிந்தது கிளம்பலாம் என்று ஒரு காட்சியில் சொல்கிறார் பிரசன்னா. அதைப் பற்றி குழப்பமே ஏற்படுகிறது.
கடத்தல் கும்பலை ஏற்கெனவே நரேனுக்கு தெரிந்து விடுவது இருக்கின்ற சுவாரஸ்யத்தையும் இல்லாமல் ஆக்கிவிடுகிறது. போதாக்குறைக்கு பொன்வண்ணன் & கோ கண்டுபிடிக்கிறோம் என்ற பெயரில் கால் ட்ரேஸரிலேயே பாதி பின்பாதியை செலவிட்டு வீணடிக்கிறார்கள் என்றால் போலீஸை டைவர்ட் செய்துவிட்டு வில்லன் & கோ இன்னொருபுறம் தப்பிக்க இவர்கள் அதை கண்டுபிடிக்கும் காட்சிகளும் “அவங்க நார்த் மெட்ராஸ் பக்கம் போறாங்கனா; நாம இப்ப இங்கே என்ன பண்றோம்“ உட்பட பல வசனங்களும் படத்தின் ஹைலைட் காமெடிக் காட்சிகள். மிரட்டலான முன்பாதி; பரீட்சார்த்த பின்பாதி என வித்தியாசமான சினிமா என்றாலும் எக்ஸ்பெரிமென்டில் வெடித்த கெமிஸ்டரி குடுவையாகிவிடுகிறது.
இவை தவிர்த்து வித்தியாசம் வித்தியாசம் என பெருமிக் கொள்ளும் இயக்குநர்கள் மத்தியில் மிஷ்கின் தவிர்க்க முடியாத உண்மையாகவே மாறுப்பட்ட இயக்குநர். உழைப்புக்கும் மெனக்கெடுதலுக்கும் பாராட்டுக்கள்.
அஞ்சாதே முன்பாதியில்; சிரிக்காதே பின்பாதியில்
தாரே ஜமீன் பர் – விமர்சனம் பிப்ரவரி 10, 2008
Posted by M Sheik Uduman Ali in Reviews.Tags: தாரே ஜமீன் பர், Tare Zameen Par
4 comments
கணிதக் குறியீடுகள், மொழிகளின் எழுத்து வடிவங்கள் இவை மனதில் தங்க மறுத்தால் உங்களுக்கு எப்படியிருக்கும்? உங்கள் குழந்தைகளுக்கு!. எதிர்காலம் ஒன்றை மட்டுமே மனதில் இருத்தி குழந்தைகளின் அழகான சின்னஞ்சிறு உலகம் பாழாக்கப்படுவது எவ்வளவு கொடுமை. இவற்றை அவ்வளவு அழகாக அக்கறையாக பேசியிருக்கிறார் அமீர்கான்.
எழுத்துக்கள் சித்திரக் குழப்பங்களாகவும், எதையும் கூர்நோக்கி பார்த்து சிந்திக்க முடியாத ஒரு சிறுவனின் நிலைதான் படம் நெடுக பரவிக்கிடக்கிறது. அவனது சேஷ்டைகள், வாழ்க்கை முறை போன்றவை சினிமா என்ற முறையில் விறுவிறுப்பாக நக்கலாக தோன்றினாலும்; இவனது எதிர்காலம் என்னாகுமோ என நம்மை பதற வைக்கிறது.
குழம்பிய குட்டையிலிருந்து அவ்வளவு கூர்நோக்கி குட்டி அயிரை மீன்களை பிடித்து தன் வீட்டுக் குடுவையில் விடுகிறான். எல்லாச் சிறுவர்களிடமிருந்தும் அதீதமாக விலகி தனக்கான அந்த பிரம்மாண்ட கற்பனை உலகில் பிரியமாக வாழ்கிறான். அவனது ஓவியங்கள் அத்தனை அழுத்தமாகவும் அழகாகவும் இருக்கிறது. அதனை ஹோம்வொர்க், எக்ஸாம் போன்ற நீராவிகள் கலைத்து தொல்லையளிக்கின்றன. அவனை ஒரு மக்குப்பிள்ளையாகவே பெற்றோரும், உலகமும் பார்க்கிறது. திருந்துவதற்காக போர்டிங் ஸ்கூலில் சேர்க்கின்றனர். தனிமையும் கண்டிப்பும் அவனது வாழ்க்கையை நரகமாக்குகிறது. சரியான நேரத்திற்கு தற்காலிக ஆசிரியராக வருகிறார் அமீர்கான். அவனக்கு ஆதரவாக இருந்து அவனது கற்பனை உலகத்தை தற்கால வாழ்க்கை முறைக்கு பொருந்த செய்கிறார்.
படம் நெடுக தனது நடிப்பு சர்வாதிகாரத்தால் நம்மை கட்டி போடுகிறான் சிறுவன் தர்ஷீல் ஷபாரி. நம்ம வீட்டு வாண்டுகள் மாதிரி உச்சி நுகர்ந்து கொஞ்சும் அளவிற்கு ஆசை. வகுப்பறை பாடங்களில் யாரோ ஒருவன் எழுதிய “ஜாக்டவ்” ஏட்டு சுரைக்காய் கசந்து ஜன்னல் வழியே இயற்கையை படிக்கும் அவனது முனைப்பு எல்லாமே ஆர்டிபிஷியலாகி மரங்களை கூட எக்ஸ்கர்ஸன் என்ற பெயரில் பார்க்கப் போகும் நம் வருங்கால தலைமுறையை நினைவு கொள்ள வைக்கிறது. ஒவ்வொரு பிரேமிலும் தன் நடிப்பால் அசத்துகிறான்; சிரிக்க வைக்கிறான்; அழ வைக்கிறான். குழந்தை நட்சத்திரத்திற்கான சர்வதேச விருதுகள் கிடைக்க வாழ்த்துகள் தர்ஷீல். இவனது அழகான அக்கறையான அம்மா, கண்டிப்பும் பொறுப்பும் தவிர உத்தியோகமே உலகம் என்று வாழும் அப்பா, அன்பான அண்ணன் என நாம் பழகி போன ஒரு வீடு போன்ற அன்யோனத்தை ஏற்படுத்துகிறது.
குழந்தைகளின் நேசனாக வந்து அவர்களின் மேல் அன்பும் அக்கறையும் கொள்ளும் துறுதுறு ஆசிரியராக அமீர்கான். தர்ஷீலை முன்னிலைப்படுத்தி தான் எங்கு நின்றால் நன்றாக இருக்குமோ அங்கு நிற்கிறார்.
சேதுவின் சினிமாட்டோகிராபியும் சரி; ஷங்கர்-எசான்-லாயின் பின்ணணி இசை மற்றும் பாடல்களும் சரி திரைக்கதையோடு விரவி பயணிக்கின்றன. அதிலும் ஷங்கரின் தாரே ஜமீன் பர் பாடல் உருக வைக்கிறது. ஸ்கூலுக்கு பங்கடித்துவிட்டு தன்னந்தனியாக மும்பையை சுற்றும் அவனது சந்தோஷ உலகமும்; போர்டிங் ஸ்கூலில் அவனது பிரிவு சோகத்தையும் நம் மனதில் பதித்து உருக வைக்கின்றனர். படத்தொக்குப்பு மட்டுமில்லாமல் திரைக்கதைக்கான பின்புலங்களையும் ஆராய்ந்து உண்மை கலந்து கொடுத்து தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார் அமோல் குப்தெ.
கிராபிக்ஸை கொண்டு எழுத்து ஊடகங்களில் மட்டுமே சிறப்பாக விளக்கக் கூடிய காட்சிகளை அதை விட சிறப்பாக விளக்கியிருக்கிறார்கள் டாடா கிராபிக்ஸ். குறிப்பாக 3 x 9 = 3 போடும் தர்ஷீலின் கற்பனா சினிமா.
அடிதடியாக கஜினியை தருவார் என எல்லோரும் எதிர்பார்த்திருக்க உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் அமீர்கான். சிறுவர்களுக்கான உலகத்தை சிறப்பாக காட்டுவதில் ஈரானிய படங்கள் தான் பிரசித்தம். அந்த வகையில் இந்தியாவிற்கான வெகுஜன சினிமா கணக்கை ஆரம்பித்து வைத்திருக்கிறார் அமீர். (“மல்லி” போன்ற டாக்குமென்டரிகளை நம்மில் எத்தனை பேர் பார்த்திருப்போம்.) எந்த கமர்ஷியல் ரெசிபியும் இல்லாமல் ஆடியன்ஸை உணர்வோடு அணுக வைத்து அச்சிறுவனது உலகத்திற்க்கு நம்மை கூட்டிச் சென்று அவனது சுக துக்கங்களில் பங்கெடுக்க வைத்து அட! போங்களய்யா! இதை விட சிறப்பாக ஒரு படத்தை உங்களாலும் சரி மற்றவர்களாலும் சரி தர முடியாது.
முன்பாதியில் நம்மை அழைத்து சென்று சிரிக்க வைத்து பின் பாதியில் உருக வைக்கிறான் அமீர்கான் என்ற ஸ்வீட் அரக்கன். எப்படா முடியும் என்ற சினிமாக்களையே பார்த்து அலுத்து போன நமக்கு படம் முடிந்து விடக்கூடாதே என்ற பதட்டம் பற்றிக் கொள்கிறது. இவ்வளவுக்கும் நமக்கு ஹிந்தி தெரியாது நண்பர்களே!?!?!
டீயுஷன், பாட்டு வகுப்பு, கம்பயூட்டர் வகுப்பு, கராத்தே, ஹிந்தி வகுப்பு என்ற டைட்டான உங்கள் செல்வங்களின் ஒரு நாள் ஷெட்யூலை பங்கடித்து விட்டு ஒரு தடவை போய் வாருங்கள். உங்கள் செல்ல செல்போன்களையும் அணைத்து விடுங்கள்.
சில படங்கள் பார்க்கும் போது சந்தோஷமோ; கோபமோ; எரிச்சலோ; ஏன் சில நேரங்களில் கண்ணீரோ வருவதுண்டு. ஆனால் விமர்சனம் எழுதும் போது அவ்வளவு டிஸ்டர்ப்டாக இருப்பதில்லை. ஆனால் எழுதும் போதும் கண்ணீரை வர வழைத்த உண்மையான சினிமா இது. தாரே ஜமீன் பர் என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டேன்,