jump to navigation

தசாவதாரம் ஜூன் 18, 2008

Posted by M Sheik Uduman Ali in Reviews.
Tags: ,
5 comments

பிரேசிலில் ஒரு வண்ணத்துப்பூச்சி சிறகடித்துப் பறந்தால் டெக்ஸாஸில் டொரண்டோ வர வாய்ப்பிருக்கிறதா? என்ன பிசிறு பிடித்திருக்கென்று நினைக்கின்றீர்களோ? இதற்கு பெயர் தான் கயாஷ் தியரி (பட்டர்பிளை விளைவு என்றும் அழைப்பர். நன்றி http://en.wikipedia.org/wiki/Chaos_theory) . மிகவும் சென்ஸிடிவான எந்தவொரு நிகழ்வுகளும் அதன் ஆரம்ப நிலைகளில் மிகச்சிறிய மாற்றத்தை சந்தித்தாலும் விளைவுகள் பெரிதாக இருக்கும். இந்த மாதிரி கயாஷ் நிகழ்வுகள் ஒன்றிற்கொன்று சம்பந்தமுடையதாக இருக்கும். ஆச்சா! இதை தான் ஆன்மிகத்தில் ஒவ்வொரு நிகழ்வுகளையும் இறைவன் ஏதோவொரு வகையில் தொடர்புள்ளவைகளாக ஆக்கி வைத்திருக்கின்றான் என்று கூறுகின்றோம். கமலின் தசாவதாரமும் இதை மையப்படுத்தி தான்.

இதையெல்லாம் தாண்டி பிடித்த விசயம் மணல் கொள்ளை விவகாரத்தை ரத்தமும் சதையுமாக கமல் சொன்ன அழகு. ஆற்றங்கரை உள்ள ஊர்களுக்கு சென்று பாருங்கள். ஆற்று மணலை சூறையாடியதன் கோரம் தெரியும்.

சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையே நடந்த 12ம் நூற்றாண்டு சண்டையில் ஆரம்பிக்கும் இந்த பட்டர்பிளை நிகழ்வு பயோ வெபன் (அதுதாங்க உயிரியல் ஆயுதம்), சுனாமி என பெரிய விளைவுகளுடன் முடிகிறது. இந்த இடைவெளியில் பத்து வித அரிதாரங்களில் ஒரு சேஷிங் நிகழ்வை மட்டும் கொண்டு மொத்த படமும் பரந்து விரிந்து நிற்கின்றது. பயேவெபனை கார்கோ விமானத்தில் ஏற்றி முடிக்கிற வரையில் ஹீரோ கமலுக்கும் வில்லன் கமலுக்கும் இடையே நடக்கும் சேஷிங் பரபரப்பு ஹாலிவுட் தரம்.

கமல் தன்னை உலக நாயகன் என்று நிரூபிக்க இனி அவசியமில்லை தான். பத்து விதமான கேரக்டர்களாக திரையில் கோலோச்சும் இவரது நடிப்பு பிரம்பிப்பின் உச்சக் கட்டம். “வெங்கேடஷ் ராவ், நீ தெலுங்கா?” என்று அக்மார்க் ஆந்திரவாசியாக வரும் பல்ராம் நாயுடு கேரக்டர் கலகலப்புடன் நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்கின்றது என்றால் வின்சென்ட் பூவராகன் கேரக்டர் சிலிர்க்க வைக்கின்றது. கறுத்த தேகத்தில் தடித்த வார்த்தைகளில் சாத்வீகத்துடன் இயற்கையை சுரண்டும் மூர்க்கர்களை எதிர்த்து போராடும் மண்ணின் மைந்தன் கேரக்டர். மனதை புரட்டுகிறார். இவையெல்லாம் தாண்டி அட்டகாசமான அமெரிக்க உச்சரிப்புடம் இங்கிலீஷ் பேசும் அமெரிக்க வில்லனாக வரும் கிறிஷ்டியன் ப்ளெட்சர், கலீபுல்லா கான், கிருஷ்ணவேணி பாட்டி இவர்களும் நம் மனதை கொள்ளையடிக்கும் அளவிற்கு உலக நாயகன் நடித்திருத்தும் இவர்களுக்கான அரிதாரங்களில் இருக்கும் செயற்கைத்தன்மையினால் சறுக்கியிருக்கிறார். எல்லோருக்கும் ஏதோ முகத்தில் “மாஸ்க் போட்ட மாதிரி இருக்கிறது.

பயோவெபனுடன் ஓடிக்கொண்டிருக்கும் கமலை நச்சுபிடுங்கும் ஆண்டாளாக அசின் அமர்களப்படுத்தியிருக்கிறார். 12ம் நூற்றாண்டு கோதையாகவும் மனதில் நிற்கிறார். அப்புறம் மல்லிகா ஷெராவத். இந்த கவர்ச்சி பிசாசு பண்ணும் வில்லத்தனம் பயமுறுத்துகிறது.

கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் கமல். எங்கேயும் கேரக்டர்களை கொண்டு எந்தவொரு குழப்பமும் இல்லாமல் ஒவ்வொரு கேரக்டர்களையும் அவர் உலவ விட்டிருக்கும் நேர்த்தி அப்பப்பா! பிரமிக்க வைக்கின்றார். எப்போடா இன்டர்வெல் வரும் எப்போடா கிளைமாக்ஸ் வரும் என்று நினைக்க முடியாத அளவிற்கு திரைக்கதையில் இவரின் உழைப்பு நிச்சயம் தேசிய விருதிற்காவது அழைத்துச் செல்ல வேண்டும். ஒரு பக்கம் ஆன்மிகம் சார்ந்த நடுநிலைமையான கருத்து; மற்றொரு புறம் தனது பகுத்தறிவு கேள்வி; மற்றொரு புறம் சுற்றுப்புற சூழலிருக்கும் உண்மையான அக்கறை; அமெரிக்காவை பற்றிய கசப்புணர்வு என வசனங்களில் சிலிர்ப்புகின்றார். “உங்க பெருமாளுக்கு என்ன விட கக்கூஸ் தான் ரொம்ப சுத்தமோ, “கடவுள் இல்லைனு நான் சொல்லல; இருந்தா நல்லாயிருக்குமேனு சொன்னேன், “என்னையா தெலுங்குகாரன் நான் தமிழ் பேசுறேன்; தஞ்சாவூர்காரன் நீ இங்கிலீஷ் பேசுறே – தமிழ உங்கள மாதிரி தெலுங்குகாரங்க வாழ வைப்பாங்கங்கிற நம்பிக்கை தான், “சாருக்கு அஞ்சு மொழி தெலுங்கிலேயே தெரியும் என்று நிறைய…நிறைய….

ஆனால் எல்லாவற்றையும் விட வின்சென்ட் பூவராகனின் நாகர்கோவில் பேச்சும், கபிலனாக வந்து மணல் கொள்ளையை பாடும் கபிலனின் வரிகளும் இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை. திருஷ்டி பொட்டுகளும் உண்டு. ஜப்பானி கமலும் வில்லன் கமலும் மோதும் போது சின்னப் பிள்ளைத்தனமாக “ஹிரோஷிமா ஞபாகமிருக்கிறதா?… உனக்கு பெர்ல் ஹார்பர் ஞபாகமிருக்கிறதா? என்கின்றனர். பல்ராம் நாயுடு “என்ஏஷியெல் என்றால் என்ன என்று ஒரு விஞ்ஞானியிடம் கேட்க அந்த மங்குனிக்கு உப்பு என்று கூட சொல்ல தெரியாமல் முழிக்கிறதாம்.

எல்லா சென்டர்களையும் கவர்வதிற்கு சில லாஜிக் பார்க்காத மசலாக்களும் உண்டு. எல்லா இடமும் தெரிந்த மாதிரி சென்னையை மிரட்டி எடுக்கும் அமெரிக்க வில்லன்; அப்படியே பொடி நடையாக நடந்து கிராஸிங்கில் ரயிலில் ஏறும் கமல் & அசின் என சிலக்காட்சிகள்.

காமிரா, பின்ணணி இசை, படத் தொகுப்பு இவை ஒரு சினிமாவின் ஜீவ நாடிகள். இந்தப் படத்தில் “It Happenedஎன்று சொல்வார்களே. அதே மாதிரி தான். 12ம் நூற்றாண்டு பிரம்பிப்பு முதல் சுனாமி வரை ரவி வர்மனின் காமிரா திரைக்கதை ப்ரசண்ட் செய்ததே தவிர புத்திசாலித்தனத்தை காட்ட முயலவில்லை. அதுவும் அந்த கும்மிருட்டு ஆற்றங்கரை. பிரும்மாண்டமாக இல்லை என்றாலும் தேவையான அளவிற்கு கதையோடு இழைந்த பின்ணணி இசையமைத்திருக்கிறார் தேவி ஸ்ரீபிரசாத். அடுத்து தணிகாசலத்தின் கத்திரி, காட்சிக்கு காட்சி வெட்டித் தைத்து நம்மை படத்தோடு ஒன்ற வைக்கின்றது. வைரமுத்து வாலியின் வரிகளுக்கு உற்சாகமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இசையமைத்திருக்கின்றார் ஹிமேஷ் ரேஷ்மயா. அதுவும் “கல்லை மட்டும் கண்டால்… அற்புதம்.

பயோ வெபனை விழுங்கும் வில்லன்; சரியாக வரும் சுனாமி; ஐம்பது வருடமாக மகனை தேடும் கிருஷ்ணவேனி பாட்டி மண்ணில் விழுந்து கிடக்கும் பூவராகனை மகன் என்று நினைத்து உடைந்து அழும் காட்சி என கிளைமாக்ஸ் மெய்சிலிர்க்க வைக்கின்றது.

“கமலுக்கு என்ன! ஹாலிவுட் தரமப்பா என்று சொல்ல நம்முடைய சினிமாக்களின் வணிக வரம்பு மட்டுமே தடுக்கிறது என்பதற்கு தசாவதாரத்தில் சில உதாரணங்கள் உண்டு. அவை எல்லாமே கோடிகளை நம்பியே இருக்கின்றன.

“பைரேட்ஸ் ஆப் தி கரிபியன் தரத்திற்கு கமலின் சில அவதாரங்களுக்கு மேக்கப் வசதி கிடைத்திருந்தால் சிலிர்ப்பாக இருந்திருக்கும்.

சர்வதேச தரத்திலான விசுவல் எபெக்ட்ஸ். ரங்கராஜனை பெருமாள் சிலையோடு கட்டி கடலில் மூழ்கடிக்கும் காட்சியை இன்னும் சில கோடிகள் கிராபிக்ஸில் முதலீடு செய்திருந்தால் அதன் பிரம்மாண்டம் கூடியிருக்கும்.

கலை. 12ம் நூற்றாண்டு செட்டோ இல்லை சுனாமியின் பின் விளைவு காட்சிகளோ இன்னும் சில கோடிப் பணம் போட்டு எடுத்திருந்தால் ஹாலிவுட்டிற்கு “வ்வே காட்டியிருக்கலாம்.

என்ன செய்ய, ஹாலிவுட்டில் பிறக்காதது கமலின் கயாஷ் விளைவாகக் கூட இருக்கலாம்.

சில மில்லியன் டாலர்களில் எங்களால் சர்வதேச தரத்திற்கு தரமுடியவில்லை என்றாலும் அரிதாரங்களை பிரித்துப் பார்த்தால்

தசாவதாரம் – கமலின் ஐம்பது வருட சினிமா அனுபவத்தின் அசத்தலான புரபைல்.

குருவி மே 9, 2008

Posted by M Sheik Uduman Ali in Reviews.
Tags: ,
1 comment so far

விஜய்: அண்ணா! தரணி அண்ணா. தூளா ஒரு படம் பண்ணிரலாம்னா. பத்து நிமிஷத்திற்கு ஒரு ஃபைட்டு, கால் மணி நேரத்திற்கு ஒரு ஸாங்க். அப்புறம், ஆந்திராவுல மகேஷ் பாபு பாத்தீங்களாண்ணா! அவர் பாணியிலேயே இருக்கட்டும்னா. சும்மா இந்த பயலுக டப்பிங் படமாவே எடுக்குறாண்டானு நாக்கு மேல நங்கூரம் போட்டு பேசுறானுங்க.
தரணி: விஜய், ரொம்ப கஷ்டப்பட வேண்டாம், கதையோட டர்னிங் பாயிண்ட ஆந்திராவுலேயே வச்சுக்கலாம். அப்பத்தான் சும்ம சூடு பறக்கும். அப்புறமா, நம்ம பசங்க அண்ணா, பில்லா பட டீமே மலேசியாவுல டேரா போட்டாங்கண்ணா. நம்மளும் ஒரு வாட்டி போகலாம்ணானு சொன்னானுங்க. முக்கியமான காட்சி ஒண்ண அங்க வச்சுக்கலாம்.

விஜய்: ஓகேணா. கிளப்பிரலாம். அண்ணா அப்படியே கொஞ்சம் திருப்பாச்சி, கில்லி முக்கியமா நான் த்ரிஷாவை பிடிச்சுக்கிட்டு ஓடுற மாதிரி சேஸிங் சீன் எல்லாம் நல்லா திங் பண்ணுங்கணா!

இப்படித்தான் ஆரம்பித்திருக்கும் குருவியின் “ஸ்கோப்பிங்அல்லது டிஸ்கஷன்.

ஒரு பக்கம் ரேஸ் நடக்க இன்னும் ஐந்து நிமிடங்கள். நம்ம தளபதியோ இன்னும் இன்ட்ரோவே கொடுக்கல. என்ன நடக்குமோ என்று பரபரப்பாக ஆரம்பக் காட்சிகள் இருக்கும் என்று தானே நினைத்தீர்கள். அது தான் இல்லை. ரொம்ப ரிலாக்ஸாக கார்ப்பரேஷன் செப்டிக் டேங்கோ அல்லது தண்ணி கிடங்கோ தெரியல அதோட மூடியை வீசி தண்ணீர் பீய்ச்ச நம்மாளு இன்ட்ரோ கொடுக்கிறார். அப்புறம் ரொம்ப ரிலாக்ஸா பேமிலி பேக்ரவுண்டை படத்தோட இணைந்த அல்லது பிணைந்த டயலாக்குகள் மூலமாக விளக்குகிறார். போதாதென்று, முதலில் வில்லன் & கோவின் அறிமுகங்களை சுமன் தன் பங்கிற்கு டயலாக்குகளிலேயே விளக்குகிறார். அப்புறம் அந்த கார் ரேஸிற்கு வருகிறார் நம்ம ஹீரோ. காயலான் கடைக்கு போடுற மாதிரி ஒரு கார வச்சுக்கிட்டு ஐயா ஜெயிக்குற கொடுமை இருக்குதே… போதும்டா என்றால் உடனே மாளவிகாவுடன் ஒரு பாட்டு. அதிகமாக அந்த பாட்டிற்கு உழைத்திருக்கிறார் விஜய். ஆனாலும் ரொம்ப அமெச்சூர்த்தனமாகவே இருக்கிறது.
சரி தொலைஞ்சோம்டா என்று நினைக்கும் போது அப்பா… கடன்… கொத்தடிமை… ஐம்பது லட்சம் ரூபாய் செக்…என சூடு பிடிக்கிறது கதை.

அதுவரை அம்மூஞ்சியாக இருக்கும் விஜய் பரபரப்பாக பட்டையை கிளப்ப ஆரம்பிக்கிறார். குருவியாக மலேசியாவிற்கு பறக்கும் விஜய் சுமன் வீட்டில் டைமண்ட் திருடுவதும், அதைச் சுற்றிய த்ரிஷாவின் ரொமான்ஸ் காட்சிகளும் சூடான வெயிலுக்கு கிர்னி ஜூஸ் என்றால், சென்னையில் விஜயோடு த்ரிஷா அடிக்கும் லூட்டிகள் ஜில் ஜில் ஜிகிர்தண்டா.

ஆக்ரோஷமான பார்வை, அதிரடியான சண்டை, லேசான குறும்பு, சூப்பரான டான்ஸ் என விஜய் அக்மார்க் கரம் மசால் ஸ்டாராக கிளப்புகிறார். டயலாக்குகளையும் குறைத்திருக்கிறார்.

அட என்ன இது த்ரிஷா. கறுப்பாக, குவிந்த மூஞ்சியுமாக. அப்படியே ஷாக்காகிட்டேன். கொஞ்சம் காஸ்ட்யூம்ஸ், மேக்கப்பில் கவனம் செலுத்துங்க அம்மணி. ஆனால், கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் விஜய்யோடு இவர் அடிக்கும் லூட்டிகள் சூப்பர் பெப்பி.

முன்பாதியில் விஜய்க்கு நல்ல துணையாக கலகலப்பாக வரும் விவேக் பின்பாதியில் அப்பீட் ஆகிறார். சிவாஜியின் ரஜினி கெட்டப்பில் சுமனும், கொண்டா ரெட்டியாக ஆஷிஷிம் வருகிறார்கள். எல்லா சினிமா வில்லன்களும் செய்யும் அதே கெட்டதை செய்கின்றனர்.

“பல்லானது“, “தேன் தேன் என தரணியின் பாசறையில் வித்யாசாகர் ரகளை பண்ணியிருக்கிறார். இசையை கட்டுக்கோப்பாகவெல்லாம் பார்க்காமல் காட்டுத்தனமாக அடித்திருக்கிறார். அதுவும் “குருவி குருவி அடிச்சா பாட்டு. எகிறுதுன்னாவ்.

அட, பிரியாணி தான் என்று முடிவு பண்ணிய பிறகு தயிர் சாதம், ஊறுகாய் என்றெல்லாம் குழப்பிக்காமல் விறுவிறுவென படத்தை நகர்த்தியிருக்கிறார் தரணி.

முன்ன பின்ன தெரியாத ஊர்ல வில்லன் கும்பல் சரவுண்ட் பண்ணவும் எப்படி ஹீரோவுக்கு ட்ரெயின் வரும்னு தெரிஞ்சு டயலாக் விடுறார்; தண்ணிக்குள்ள இருந்து எப்படி தப்பிச்சு வருகிறார்; எப்படி ஒத்த ஆளா எல்லாத்தையும் சாய்க்கிறார் அப்படினு லாஜிக் பார்க்காமல் அப்படியே தெலுங்கு பக்கம் போய் நிறைய மசாலா சேர்த்து காரமாக சாப்பிட நீங்கள் ரெடியென்றால்

குருவி –  சூடான ஹைதராபாத் பிரியாணி

அறையின் எண் 305ல் கடவுள் ஏப்ரல் 28, 2008

Posted by M Sheik Uduman Ali in Reviews.
Tags: ,
4 comments

மதிப்பிற்குரிய இயக்குநர் சிம்புதேவன் அவர்களுக்கு முதலில் ஒரு விண்ணப்பம். மற்ற அரை வேக்காட்டுத்தனமான சினிமாக்கள் மாதிரியே சாஃப்ட்வேர் துறையைப் பற்றியும் அதில் குறுகிய காலத்தில் பெரும் பணம் ஈட்டும் இளைஞர்களை பற்றியுமான கிண்டல் தொனியை தாங்களுமா எடுத்துக் கொண்டீர்கள்.

200% வரை லாபம் வைத்து விற்கும் அல்லது ஏமாற்றும் மருந்து வியாபாரிகளோ, ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரைக்கான ஒரு படத்திற்கு சில பல கோடிகளை சம்பளமாக வாங்கும் கதாநாயகர்களோ, இன்னும் நிறைய நிறைய கொழுத்த முதலைகளை உங்கள் கலைக் கண்களுக்கு தெரியவில்லையா என்ன?

மற்றபடி சாஃப்ட்வேர் துறையின் நிஜமான சவால்களை பற்றி ஒரு தனி பிளாக்காக எழுதலாம்.  ஒரு குத்துப்பாட்டு வைப்பது மாதிரி  அவ்வளவு எளிதல்ல சாஃப்ட்வேர் டெவெலப்மென்ட்.  இன்னும் பல அரசாங்க நிறுவன அதிகாரிகளே இதற்கு நிகராக சம்பளம் வாங்குகிறார்கள் என்பது பாவம் சிம்புதேவனுக்கும் தெரியவில்லை.  சரி விசயத்திற்கு வருவோம்.

அறிமுகக் காட்சியிலேயே கதைக் களத்தையும் கதாபாத்திரங்களையும் மிகவும் நேர்த்தியாக நேரேட்டிவாகவும் நேரடியாகவும் சொல்லி அசத்தி விடுகிறார்கள். மெல்ல எந்த புள்ளியை நோக்கி கதை நகரப்போகிறது என்ற எதிர்பார்ப்புடன் இருக்க திடீரென கடவுள் சந்தானம் மற்றும் கருப்புக்கு காட்சியளிக்கிறார். வழக்கம் போல ரொம்ப மென்மையாக மடிப்பு கலையாத வெள்ளை குர்தாவில் கடவுளாக பிரகாஷ்ராஜ். ஏனப்பு, கடவுள் டீக்காக கோர்ட், சூட் போட்டெல்லாம் வரமாட்டாரா என்ன?! தங்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் கடவுள் தான் காரணம் என்று திட்டித் தீர்க்கும் சந்தானம் மற்றும் கருப்பு கூட்டணியிடம் பண உதவி செய்ய மாட்டேன், நான் கடவுள் என்று யாரிடமும் சொல்லக் கூடாது என்ற இரண்டு அக்ரிமெண்ட் போட்டு “மாரல் சப்போர்ட் செய்கிறார். இதை சுற்றிய சம்பவங்கள் தான் படம்.
கடவுளாக ரொம்ப ஸாஃப்ட்டாக பிரகாஷ்ராஜ் நடிப்பது ஏனோ அவ்வளவு ஒட்டவில்லை. அவரை ஒரு சாதாரண மனிதராகவேத் தான் கற்பனை செய்ய முடிகிறது.

மஞ்சள் தண்ணி தெளித்து விட்ட ஆட்டுக்குட்டிகள் மாதிரியே நிற்கிறார்கள் சந்தானமும் கஞ்சா கருப்பும். இதனால் இவர்களின் டிபிக்கல் ஹூயூமர் சென்ஸ் கூட எடுபடாமல் போகிறது. இதைத் தவிர ஒரு டஜன் பாத்திரங்கள் திரைக்கதையை நகர்த்த உதவுகின்றன.


கடவுளின் மைக்ரோ மற்று மேக்ரோ தத்துவத்தை சந்தானத்தையும் கருப்பையும் கொசுவை விட சின்னதாக்கி விசுவலாக சொன்ன விதத்திலும், நாத்திகவாதியான ராஜேஷுடன் கடவுளைப் பற்றிய சித்தாந்தத்தை விளக்கும் வசனங்களும் சிம்புதேவனை அடையாளம் காட்டுகின்றன. இரண்டு காமெடி ஆக்டெர்களை வைத்து படம் பண்ணிய தைரியத்திற்கு பாராட்டலாம். அப்பாடா! நல்லவேளையாக கடவுள் இந்து சாமியாகவோ, இல்லை இயேசு சாமியாகவோ இல்லாமல் பொதுவாக காட்டியதற்கு நன்றி. கடவுள் சர்ச்சையான பல விசயங்களை பேசாமல் எஸ்கேப் ஆகிவிடுகிறார்.

வித்யாசாகரின் எளிமையான இசைக்கோப்பில் பாடல்கள் லயிக்க வைக்கின்றன. அதிலும் கேட்டது தான் என்றாலும் “குறை ஒன்றும் இல்லை பாடல் மனதை உருக்குகிறது.

கடவுள் கான்ஸப்டை கையிலெடுத்தவர் திரைக்கதையில் இன்னும் ஆழமான காட்சிகளை புகுத்தி இவரின் டிரேட்மார்க் காமெடி மூலமாகவும், கொஞ்சூண்டு மெஸேஜ்களாலும் சுவாரஸ்யப்படுத்தியிருக்கலாம். சாமிகளின் திருவிளையாடல்களை விளக்கும் பழைய கால சினிமாக்களில் வரும் சுவாரஸ்யம் கூட இதில் மிஸ்ஸிங். அதிலும் வழக்கம் போல கடவுளுக்கே மொபைல் போன் போல அனைத்தையும் கன்ட்ரோல் செய்யும் ஒரு கேஜட்டை கொடுத்திருக்கிறார்கள். இதை திருடி விட்டு எஸ்கேப் ஆகும் சந்தானம், கருப்பு சம்பந்தமான காட்சிகளும் திருப்பங்களும் சஹாரா போல வறட்சியென்றால் பிரகாஷ்ராஜ் சம்பந்தமான காட்சிகள் ஆழமான புரிதல்கள் இல்லாமல் வழவழ அட்வைஸ் அரங்கமாக மாறிவிடுகிறது. இதனால் சில சிவப்பு சிந்தாந்தங்களும் யதார்த்தமான அட்வைஸ்களும் லேசாக கடந்து விடுகின்றன.

இருந்தாலும் இரண்டரை மணி நேரம் நம்மை சீட்டில் உட்கார்ந்து பார்க்க வைக்க முடிகிற அளவிற்கு வழக்கமான ஆக்சன் மற்றும் காதல் சினிமாக்களிலிருந்து விலகி கதை சொன்ன அழகிற்கு சிம்பு தேவனை பாராட்டலாம். குறையொன்றும் இல்லை…

அறை எண் 305ல் – கொஞ்சம் கொசுத் தொல்லை.

யாரடி நீ மோகினி – விமர்சனம் ஏப்ரல் 15, 2008

Posted by M Sheik Uduman Ali in Reviews.
Tags: ,
2 comments

அபத்தங்களின் அழகான(?) கூட்டாஞ்சோறு இந்த மோகினி(ப் பிசாசு).

நயன்தாரா விரும்பி ஏற்றுக் கொண்ட நிச்சயதார்த்தம். சந்தடியில் தனுஷ் புகுந்து நீ என்னை காதலிக்கிறது உன் கண்களில் தெரிகிறது என்கிறார். அது எப்படியோ தெரியவில்லை ஹீரோயினுக்கே தெரியாத காதலை டெலிபதி மூலம் கோடம்பாக்கம் ஹீரோக்கள் மட்டும் எப்படி தான் கண்டுபிடிக்கிறார்களோ?!

தனுஷின் காதலுக்காக பரிந்து பேச வரும் ரகுவரனை நயன்தாரா திட்டி அனுப்பும் காட்சிகளும் அதன் பின் வரும் திரைக்கதை திருப்பங்களும் அடக் கடவுளே!

எல்லாவற்றையும் இழந்து நிற்கும் தனுஷை தன் திருமணத்திற்காக திருநெல்வேலி கூட்டி செல்கிறான் நண்பன். அவன் திருமணம் செய்யப் போகும் பெண் நயன்தாரா என்ற அதிர்ச்சியான(!) ட்விஸ்ட். சொந்த அத்தை மகள்.

தனுஷின் நண்பனாக வரும் கார்த்திக்குமார் தான் பாவம். “அலைபாயுதே”விலிருந்தே இவர்  பெண்களாலும் திருமணங்களாலும் ஏமாற்றப்படும் அபலைப் பையனாக வந்து “உச் உச்” கொட்ட வைக்கிறார்.

ஆச்சாரமான அந்தக் குடும்பத்தினரின் மனதில் தனுஷ் இடம் பிடிக்கும் காட்சிகள் இருக்கிறதே, திரையுலகிற்கு ரொம்ப புதுசு கண்ணா புதுசு. சாம்பிளுக்கு இதோ!

  • ஊர் பெரியவரான தனுஷ் நண்பனின் தாத்தாவை ஒரு கோயில் திருவிழாவில் திடீரென புகும் வில்லன் “டேய் நீ மட்டும் இடத்த தரலை; உங்க வீட்டு பொம்பளங்கள….!! என்கிறான். இவர்களை துவம்சம் பண்ணுகிறார் தனுஷ். தாத்தா மனதில் இடம்.
  • திடீரென சாகக் கிடக்கும் பாட்டியை ஒற்றை ஆளாய் உட்கார்ந்து உயிரூட்டுகிறார் தனுஷ். பாட்டி & குடும்பத்தினரின் மனதில் இடம்.
  • பசிக்கிறது சாப்பாடு கிடைக்குமா என குடும்பத்தினரிடம் தனுஷ் கேட்க ஒரு ஸ்வீட் ஸ்டாலையே கொட்டி பசியாற வைக்கிறது குடும்பம். (அனாதை என்ற சென்டிமென்ட் வேறு)
  • தன்னை டாவு விட்டு காதலிக்கும் நயன்தாரா தங்கையை பொறுப்பான டயலாக்குகள் பேசி திருத்துகிறார் தனுஷ்

இப்படி நிறையங்கோ!

இதெல்லாம் விட ஏராளமான அபத்தங்களும் அருவருப்பு அம்சங்களும் உண்டு.

தனக்கு பாட சங்கோஷமாக இருக்கிறது என தன் வருங்கால மனைவியை வர்ணித்துப் பாட தனுஷை கோரும் நண்பன். அதை ரசிக்கும் ஒட்டு மொத்த குடும்பம்.

கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் தனுஷை தன் மார்போடு உரசிப் பார்க்கும் நயன்தாராவின் தங்கை. போதாதென்று ஒரு முதலிரவு கனவுப்பாட்டு வேறு.

ஹைய்யோ ஹைய்யோ! எழுத்து செல்வராகவனாம். ஆங்காங்கே தக்கனூண்டு தெரிகிறார் என்றாலும் நம்ப முடியவில்லை. விக்ரமனின் பாதிப்புகள் நிறைய நிறைய. ஆனால் அவராவது கண்ணியமாகக் காட்டுவார்.

தனுஷிற்கு ஒரே லக். நயன்தாராவை அருகில் இருந்து மோப்பம் பிடித்தது.  ஆனாலும் இவருக்கு அக்கா மாதிரி இருக்கிறார்.
சாப்ட்வேர் கம்பெனியை சுற்றிய அந்த கதை முடிச்சு ஏன் என்று தெரியவில்லை. அக்மார்க் சினிமாத்தனம் தான் தெரிகிறது.

ஒரே பயம் இனிமேல் வரிசையாக அபத்தமான பல்வேறு காதல்களை உருக உருக சொல்லும் சீஸன் கோடம்பாக்கத்திற்கு திரும்ப வந்து விடுமோ என்பது தான்.

யாரடி நீ மோகினி – இருட்டில் பிடித்த கொழுக்கட்டை

வெள்ளித்திரை – விமர்சனம் மார்ச் 9, 2008

Posted by M Sheik Uduman Ali in Reviews.
Tags: , ,
add a comment

அறிஞர் அண்ணாவின் “ரொட்டித் துண்டு கதையை எனது சிறுவயதில் தொலைக்காட்சி படைப்பாக பார்த்தது. அதே கரு கேரளத்திலிருந்து புறப்பட்டு தமிழுக்கு வெள்ளித் திரையாக வந்திருக்கிறதோ?

“சினிமாவை கொண்டாடுவோம் என்ற முழக்கத்துடன் நல்ல முயற்சிகளை தமிழுக்கு படைத்து வரும் பிரகாஷ்ராஜின் ஆரோக்கியமான ஆர்வம் படைப்பு முழுக்க தெரிகிறது.

சூதக, பாதக வழிகள் எதுவானாலும் சரி ஒரு ஹீரோவாக வேண்டும் என்பது பிரகாஷ்ராஜின் வெறி. பத்து வருட சிந்தனையில் உருவான ஒரு நல்ல கதையுடன் ஒரு சரியான வாய்ப்புக்காக காத்திருக்கும் பிருத்விராஜ். திடுமென கதாநாயகியாகி பணத்திற்காக அண்ண்ணால் சித்திரவதைக்குள்ளாகும் கோபிகா. பிருத்விராஜ் அசந்த சமயத்தில் அவரது கதையை திருடி பெரிய ஹீரோவாகிறார் பிரகாஷ்ராஜ். பணம், பொருள், செல்வாக்கிற்கு முன்னால் உண்மை மறைக்கப்படுக்கிறது. பிரகாஷ்ராஜை வைத்தே படமெடுத்து வெள்ளித் திரையில் ஜொலிக்க முயற்சிக்கிறார் பிருத்வி.

vellitherai.jpg

முற்றிலும் அக்மார்க் காரியவாதியாக வரும் பிரகாஷ்ராஜ் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முன்னேறுவதற்கான சிந்தாந்தங்கள் தலைகீழாக மாறிவரும் தற்கால மனிதர்களின் பிரதிபலிப்பாக வருகிறார்.

யதார்த்தத்தின் பின்வாசலில் நின்று நல்ல சினிமாவிற்காக காத்திருக்கும் உதவி இயக்குநராக பிருத்விராஜ். ஏமாற்றங்கள் தெரிந்தவுடன் வாழ்க்கையின் நெளிவு சுழிவுகள் புரிந்து சாதிக்க முயலும் உத்வேகம் நாணலாய் கூன வேண்டாம் ஆனால் மூங்கிலாய் நிமிர்ந்தும் நின்றால் முன்னேற முடியாது என்பதை திரைக்கதையோடு பிராயணித்து நம்மில் பதிந்தி விடுகிறார் பிருத்விராஜ். இயல்பிற்கு மீறிய நடிப்பினை காட்டாமல் அழகுற செய்திருக்கிறார்.

ரீலுக்கு ரீல் அழுமூஞ்சியாகவே வரும் கோபிகா பாவம். நல்ல இல்லறத்திற்காக ஏங்கியும், கணவனுக்காக பிரிந்திருக்கும் முடிவும் அழுத்தமாக சொல்லப்பட வாய்ப்பில்லையெனினும் மனதில் நிற்கிறார்.

ஒரு நடிகனின் மேனஜராக எம்.எஸ் பாஸ்கர் பண்ணும் அடாவடிகளும், சினிமாவின் பல்ஸ் தெரிந்த உதவி இயக்குநராக வரும் சார்லியும் அசத்தியிருக்கிறார்கள். லட்சுமி ராய் மற்றும் பிருத்வியின் தோழனாக வரும் “முஸ்தபாபாத்திரமும் மனதில் நிற்கிறது.

பாலித்தீவினை அந்த அகலமான வெள்ளித்திரையில் அற்புதமாக காட்டியிருக்கிறார்கள் பன்னீர் செல்வமும் கேவி குகனும். ஒரு படத்திற்கு இரண்டு கேமிராமேன்களா! என தோன்றும் போதே இரு வெவ்வேறு பின்புலங்களில் தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள். இந்த மாதிரி அழுமூஞ்சி வசனங்களுக்கெல்லாம் இப்போ ஆடியன்ஸ் ஒடிடுறாங்க என பிருத்வி ஓரிடத்தில் பேசுகிறார். இதை யாராவது படத்தொகுப்பு செய்திருக்கும் காசி விஸ்வநாதனுக்கு முதலிலேயெ போட்டுக்காட்டியிருக்கலாமோ. மற்ற இடங்களில் இயல்பான கதையோட்டத்திற்காக கத்திரியை சரியாக வெட்டியவர் பிருத்வி – கோபிகா சோகக் காட்சிகளை கொஞ்சம் கை வைத்திருக்கலாம். சின்னத்திரை சீரியல் மாதிரி ஆகிவிடுகிறது.

டைட்டில் இசையிலும் சரி பாடல்களிலும் சரி பிரமாதப் படுத்தியிருக்கிறார் ஜிவி பிராஷ்குமார். கதையோட்டத்தில் பின்ணணி இசை எப்படி பிராயணப்பட்டது என்றே தெரியாத அளவிற்கு காட்சிகளுக்கு உதவி இருக்கிறார்.

சில நல்ல படங்களின் வசனகர்த்தாவாக அறியப்பட்ட இயக்குநர் விஜியின் கன்னி முயற்சிக்கு வாழ்த்துக்கள். இதிலும் வசனங்கள் மிளிர்கின்றன. “பிரபலமாகிட்டா என்ன வேண்டுமென்றாலும் பேசாலாமா; இதெயெல்லாம் மக்கள் கேட்கிறாங்களா; இல்ல சகிச்சிக்கிறாங்களாஉட்பட சினிமாவின் கறுப்பு பக்கங்களை போகிற போக்கில் புரட்டிப் போடுகிறார்.

தாறுமாறாக பேசும் பிரகாஷ்ராஜை தவிர எல்லா பாத்திரங்களும் அதன் இயல்பில் பயணித்தாலும் பிரகாஷ் ராஜ் உட்பட அனைவரிடமும் லேசான மந்த உணர்ச்சி தோன்றுகிறது.

தெரிந்த வழித்தடங்களிலேயே கதை பயணித்தாலும் ஒரு எதிர்பார்ப்பிற்காக ஆடியன்ஸ் உட்கார வைத்திட்ட காட்சி வரிசைகள் ஏமாற்றமில்லாமல் கிளைமாக்ஸை தருகின்றன. இருந்தாலும் தியேட்டரில் கொறிக்கும் போது மட்டுமே ஞாபகமிருக்கும் பாப்கார்ன் போல் மனதில் தங்காத காட்சிகளால்

வெள்ளித் திரை – வெளிச்சம் போதவில்லை.


 

சுஜாதா – நவீன தமிழ் உரைநடையின் தலைமகன் மார்ச் 8, 2008

Posted by M Sheik Uduman Ali in Articles.
Tags:
add a comment

எளிமையான எழுத்துக்கள்

ஆனால் வலிமையான வார்த்தைகள்.

இவரது நவீன உரைநடை பாணி பலரையும் கவர்ந்திழுத்த காந்தம்.  தமிழ் பேசவே தயங்கும் இன்றைய தலைமுறைக்கு இவரது எழுத்துக்கள் புதிய பார்வையையும்,  பேசவும் எழுதவும் தைரியத்தையும் கொடுத்தது என்றால்  அது மிகையாகது.

 எளியோனுக்கும் புரிகிற வகையில் குவாண்டம் பிஸிக்ஸ், கணிணி என அறிவியலின்  குழப்பமான எல்லைகளை சுலபமாக விளக்குபவர்.

நினைத்த கருத்தை  நெத்தி பொட்டில் அடித்த மாதிரி சொல்பவர்.

யாமறிந்தவரை  இவரது  எழுத்துக்களில் இன, மத, மொழி துவேஷங்களை  தூவலாக செருகியோ, மறைமுகமாக மற்றாரை துவேஷித்தோ  கண்டது கிடையாது.

ஆன்மிகத்தை  துவேஷத்தப்படுத்தியது கிடையாது.

 எனக்கான எழுத்தின் இன்ஸ்பிரேஷன்  சுஜாதா.  பலருக்கும் முன்மாதிரி போல.

அரசியலாகவும்,  மதுக்கடைகளில் தழும்பலாகவும் மாறிவரும் சில அல்லது பல தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில்

சுஜாதா  தி லெஜன்ட்.

அஞ்சாதே – விமர்சனம் பிப்ரவரி 24, 2008

Posted by M Sheik Uduman Ali in Reviews.
Tags: ,
2 comments

மாறுபட்ட அணுகுமுறை, தெளிவான திரைக்கதை மற்றும் கூரிய கண்ணோட்டம் என
அசத்தலான ஓபனிங்குடன் ஆரம்பிக்கிறது அஞ்சாதே.

இயக்குநர் மிஷ்கினுக்கு பாராட்டுகள்:

  • திரைக்கதையில் கதாபாத்திரங்களை எந்தளவு அணுக வேண்டுமென்ற வரையறைக்குள் நின்றதற்கு (மிகைப்படுத்தப்படாத ஹீரோ மற்றும் வில்லன்).
  • காம்ப்ரமைஷ் செய்து கொள்ளாத தெளிவான ஸ்கீரின்பிளே.
  • “வேட்டையாடு விளையாடு மாதிரி இசையாலோ, வன்முறை காட்சிகளாலோ வம்படியாக ஆடியன்ஸை பயமுறுத்தாமல் மிரட்டிய தொனி.
  • மகா மெகா டெக்னாலஜி ஐயிட்டங்கள் இல்லாமல் இருப்பதை பயன்படுத்தி பிரமிக்க வைத்த அழகு.
  • எஸ்பிபி சாயலில் அழகான இவரது குரல் (அச்சம் தவிர் பாடல்)

anjathe.jpg 

போலீஸ் வேலையே லட்சியம் என வாழ்பவன் ஒருவன், பொறுக்கித்தனமாக ஊர் சுற்றுபவன் ஒருவன் என இரு நண்பர்களின் வாழ்க்கைப் பாதையை காலமும், ஒரு பெண்கள் கடத்தும் கும்பலும் புரட்டிபோடுவது தான் கதை. 
 

ஹைடெஸிபலில் கத்துவது, கங்காரு குட்டி மாதிரி ஓடுவது தவிர “நரேன்கவனிக்கத்தக்க டைரக்டர்ஸ் சாய்ஸ் ஹீரோ. சப்-இன்ஸ்பெக்டர் ஆன முதல் நாள் அனுபவம், ஆஸ்பத்திரியில் ரவுடிகளை வரிசை கட்டி அடிப்பது, பொன்வண்ணன் குழுவில் ஒரு புது இன்ஸ்பெக்டருக்கே உரிய அடக்கத்துடனும், துணிச்சலுடனும் நடந்து கொள்வது என அவ்வளவு நேர்த்தி.

சரியான பாத்திரத் தேர்வில் விஜயலட்சுமி. அன்னியோன்யமான நடிப்பு. எம்.எஸ்.பாஸ்கருக்கு இந்த படம் ஒரு நல்ல துருப்புச்சீட்டு. பொறுப்பான அப்பாவாக குணச்சித்திர ரோலில் மிளிர்கிறார்.

குங்குமப் பொட்டு வைத்து வொயிட் அன்ட் வொயிட் கெட்டப்பில் கடத்தல் கும்பலின் காட்பாதராக பாண்டியராஜனா இது! “ரான்ஸம் பேசுகிற வாக்கில் அசால்ட்டாக பாட்டிலை எடுத்து ஒருவனின் மண்டையை பொளக்கிறார். ஆழமான ஒரு ஆளாக இவரை பிரதிபலித்த விதம் அருமை. இன்னும் மெனக்கெட்டால் வெரைட்டியான ரோல்கள் நிறைய வரலாம். கடத்தல் கும்பலின் மாஸ்டர் மைன்டாக வரும் பிரசன்னாவின் புறத்தே “காக்க காக்க பாண்டியா, “பொல்லாதவன் பாலாஜி இவர்களை மிமிக்ரி பண்ணியது மாதிரி இருப்பதால் அகத்தே தோன்றும் இவரின் நடிப்பு அபேலாகிவிடுகிறது.

நட்பு காட்டும் இடங்களிலும் வெறுப்பு, பொறாமை கொள்ளும் இடங்களிலும் உணர்வுகளை அழகாக பிரதிபலித்து நடித்திருக்கிறார் நரேனின் நண்பனாக வரும் புதுமுகம் அஜ்மல். இவர்கள் வீட்டு ஏரியாவில் வசிக்கும் “குருவியின் கேரக்டர் மனதில் நிற்கும் ஒன்று.

ஆரம்பக் காட்சியாக வானத்தை வட்டமிடும் காமிராவின் ஓரத்தில் “கீழே இறங்குடா என அணிசேரும் குண்டர்கள், பாரில் தண்டால் எடுக்கும் அஜ்மலை தலைக்குப்புற எடுக்கும் காமிரா என ஆடியன்ஸிற்கு பாத்திரங்களின் கோணங்களை கூட அருமையாக புரிய வைத்திருக்கிறார் சினிமாட்டோகிராபி பண்ணியிருக்கும் மகேஷ் முத்துச்சாமி. மெல்லிய மஞ்சள் வெளிச்சத்தில் அஜ்மல் வீட்டில் பதுங்கும் பாண்டியராஜன் & கோ, தற்செயலாக வரும் விஜயலட்சுமி இவர்களின் நடவடிக்கைகளை காலடிகளை மட்டுமே காட்டி எடுத்த விதம் மாறுபட்ட அணுகுமுறை.

தனக்கென தனிப்பானியில் இசைக்கோப்பு செய்து பாடல்களிலும் பின்ணணி இசையிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார் சுந்தர் சி பாபு. சித்திரம் பேசுதடிக்கு பிறகு இது இரண்டாவது படமா என்ன? இதற்குள் வாய்ப்புகள் குவிந்திருக்க வேண்டுமே?!. கபிலனின் நிறைவான வரிகளில் “கத்தாழை”, “கண்ணதாசன் காரைக்குடி” பாடல்களின் கோரியோகிராபியும் எடுத்த விதமும் பிரமாதம். சடகோபன் ரமேஷின் படத்தொக்குப்பில் ஸ்லோவான பிளேயில் எடுக்கப்பட்ட பின்பாதி பரீட்சார்த்த முயற்சிக்கு பாராட்டலாம். அந்த மொட்டை மண்டையை கடைசி வரை காட்டாமலேயே காட்சிகளை நகர்த்திவிடுகிறார்கள்.

ரோட்டில் வெட்டுப்பட்டு கிடக்கும் ஒருவன், அவனை காப்பாற்ற முயலும் நரேனின் பதபதைப்பு;  ஒரு போலீஸ் ஸ்டேஷனின் அன்றாட நடவடிக்கைகள், ஒரு புது சப்-இன்ஸ்பெக்டருக்கு கிடைக்கும்  சின்ன சின்ன அவமானங்கள்,  கோயில் கும்பாபிஷேகம் அன்று இருட்டில் விஜயலட்சுமியிடம் தவறாக நடந்து கொள்ளும் பிரசன்னா; ஒற்றை கைலியுடன் ரோட்டில் கூனிக்கிடக்கும் மகளை ஓடி அணைக்கும் அப்பா மற்றும் ஹீரோவின் பதட்டம்; கரும்புத் தோட்ட்த்தில் வில்லன் & கோ, ஹீரோ இவர்களுக்கிடையேயான போராட்டம் என படம் நெடுக காட்சிகளை ஆணித்தரமாக புரியவைக்கும் கூரிய அணுகுமுறையில் ஒரு மாறுபட்ட தரமான சினிமாவை தந்திருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். ஒரு விஷ்வல் மீடியத்தை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு இந்தப் படம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

தமிழின் தி பெஸ்ட் ஆக் ஷன் சினிமா என்று கூறலாம் என்றால்; வித்தியாசமான அணுகுமுறை என்ற பெயரில் முன்பாதியில் ஆக் ஷனிற்கு அருமையான சிவப்புக் கம்பளம் விரித்த இயக்குநர் பின்பாதியில் கோட்டை விட்டிருக்கிறார். காக்க காக்க சாயலை தக்கணூன்டு அள்ளித் தெளித்து பாண்டியராஜனை கொல்வது முதல் கணிக்கக் கூடிய திருப்பங்களில் நகர்கிறது பின்பாதி. நாம வந்த வேலை முடிந்தது கிளம்பலாம் என்று ஒரு காட்சியில் சொல்கிறார் பிரசன்னா.  அதைப் பற்றி குழப்பமே ஏற்படுகிறது.

கடத்தல் கும்பலை ஏற்கெனவே நரேனுக்கு தெரிந்து விடுவது இருக்கின்ற சுவாரஸ்யத்தையும் இல்லாமல் ஆக்கிவிடுகிறது. போதாக்குறைக்கு பொன்வண்ணன் & கோ கண்டுபிடிக்கிறோம் என்ற பெயரில் கால் ட்ரேஸரிலேயே பாதி பின்பாதியை செலவிட்டு வீணடிக்கிறார்கள் என்றால் போலீஸை டைவர்ட் செய்துவிட்டு வில்லன் & கோ இன்னொருபுறம் தப்பிக்க இவர்கள் அதை கண்டுபிடிக்கும் காட்சிகளும் “அவங்க நார்த் மெட்ராஸ் பக்கம் போறாங்கனா; நாம இப்ப இங்கே என்ன பண்றோம் உட்பட பல வசனங்களும் படத்தின் ஹைலைட் காமெடிக் காட்சிகள்.  மிரட்டலான முன்பாதி; பரீட்சார்த்த பின்பாதி என வித்தியாசமான சினிமா என்றாலும் எக்ஸ்பெரிமென்டில் வெடித்த கெமிஸ்டரி குடுவையாகிவிடுகிறது.

இவை தவிர்த்து வித்தியாசம் வித்தியாசம் என பெருமிக் கொள்ளும் இயக்குநர்கள் மத்தியில் மிஷ்கின் தவிர்க்க முடியாத உண்மையாகவே மாறுப்பட்ட இயக்குநர். உழைப்புக்கும் மெனக்கெடுதலுக்கும் பாராட்டுக்கள்.

அஞ்சாதே முன்பாதியில்; சிரிக்காதே பின்பாதியில்

தாரே ஜமீன் பர் – விமர்சனம் பிப்ரவரி 10, 2008

Posted by M Sheik Uduman Ali in Reviews.
Tags: ,
4 comments

tare1.png 

கணிதக் குறியீடுகள், மொழிகளின் எழுத்து வடிவங்கள் இவை மனதில் தங்க மறுத்தால் உங்களுக்கு எப்படியிருக்கும்?  உங்கள் குழந்தைகளுக்கு!. எதிர்காலம் ஒன்றை மட்டுமே மனதில் இருத்தி குழந்தைகளின் அழகான சின்னஞ்சிறு உலகம் பாழாக்கப்படுவது எவ்வளவு கொடுமை.  இவற்றை அவ்வளவு அழகாக அக்கறையாக பேசியிருக்கிறார் அமீர்கான்.

எழுத்துக்கள் சித்திரக் குழப்பங்களாகவும், எதையும் கூர்நோக்கி பார்த்து சிந்திக்க முடியாத ஒரு சிறுவனின் நிலைதான் படம் நெடுக பரவிக்கிடக்கிறது. அவனது சேஷ்டைகள், வாழ்க்கை முறை போன்றவை சினிமா என்ற முறையில் விறுவிறுப்பாக நக்கலாக தோன்றினாலும்; இவனது எதிர்காலம் என்னாகுமோ என நம்மை பதற வைக்கிறது.

குழம்பிய குட்டையிலிருந்து அவ்வளவு கூர்நோக்கி குட்டி அயிரை மீன்களை பிடித்து தன் வீட்டுக் குடுவையில் விடுகிறான். எல்லாச் சிறுவர்களிடமிருந்தும் அதீதமாக விலகி தனக்கான அந்த பிரம்மாண்ட கற்பனை உலகில் பிரியமாக வாழ்கிறான்.  அவனது ஓவியங்கள்  அத்தனை அழுத்தமாகவும் அழகாகவும் இருக்கிறது.  அதனை ஹோம்வொர்க், எக்ஸாம் போன்ற நீராவிகள் கலைத்து தொல்லையளிக்கின்றன.  அவனை ஒரு மக்குப்பிள்ளையாகவே பெற்றோரும், உலகமும் பார்க்கிறது.  திருந்துவதற்காக போர்டிங் ஸ்கூலில் சேர்க்கின்றனர். தனிமையும் கண்டிப்பும் அவனது வாழ்க்கையை நரகமாக்குகிறது. சரியான நேரத்திற்கு தற்காலிக ஆசிரியராக வருகிறார் அமீர்கான்.  அவனக்கு ஆதரவாக இருந்து அவனது கற்பனை உலகத்தை தற்கால வாழ்க்கை முறைக்கு பொருந்த செய்கிறார்.

tare2.png

படம் நெடுக தனது நடிப்பு சர்வாதிகாரத்தால் நம்மை கட்டி போடுகிறான் சிறுவன் தர்ஷீல் ஷபாரி. நம்ம வீட்டு வாண்டுகள் மாதிரி உச்சி நுகர்ந்து கொஞ்சும் அளவிற்கு ஆசை. வகுப்பறை பாடங்களில் யாரோ ஒருவன் எழுதிய “ஜாக்டவ்ஏட்டு சுரைக்காய் கசந்து ஜன்னல் வழியே இயற்கையை படிக்கும் அவனது முனைப்பு எல்லாமே ஆர்டிபிஷியலாகி மரங்களை கூட எக்ஸ்கர்ஸன் என்ற பெயரில் பார்க்கப் போகும் நம் வருங்கால தலைமுறையை நினைவு கொள்ள வைக்கிறது. ஒவ்வொரு பிரேமிலும் தன் நடிப்பால் அசத்துகிறான்; சிரிக்க வைக்கிறான்; அழ வைக்கிறான். குழந்தை நட்சத்திரத்திற்கான சர்வதேச விருதுகள் கிடைக்க வாழ்த்துகள் தர்ஷீல்.  இவனது அழகான அக்கறையான அம்மா, கண்டிப்பும் பொறுப்பும் தவிர உத்தியோகமே உலகம் என்று வாழும் அப்பா, அன்பான அண்ணன் என நாம் பழகி போன ஒரு வீடு போன்ற அன்யோனத்தை ஏற்படுத்துகிறது.

குழந்தைகளின் நேசனாக வந்து அவர்களின் மேல் அன்பும் அக்கறையும் கொள்ளும் துறுதுறு ஆசிரியராக அமீர்கான். தர்ஷீலை முன்னிலைப்படுத்தி தான் எங்கு நின்றால் நன்றாக இருக்குமோ அங்கு நிற்கிறார்.

tare3.png

சேதுவின் சினிமாட்டோகிராபியும் சரி; ஷங்கர்-எசான்-லாயின் பின்ணணி இசை மற்றும் பாடல்களும் சரி திரைக்கதையோடு விரவி பயணிக்கின்றன.  அதிலும் ஷங்கரின் தாரே ஜமீன் பர் பாடல் உருக வைக்கிறது. ஸ்கூலுக்கு பங்கடித்துவிட்டு தன்னந்தனியாக மும்பையை சுற்றும் அவனது சந்தோஷ உலகமும்; போர்டிங் ஸ்கூலில் அவனது பிரிவு சோகத்தையும் நம் மனதில் பதித்து உருக வைக்கின்றனர்.  படத்தொக்குப்பு மட்டுமில்லாமல் திரைக்கதைக்கான பின்புலங்களையும் ஆராய்ந்து உண்மை கலந்து கொடுத்து தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார் அமோல் குப்தெ.

கிராபிக்ஸை கொண்டு எழுத்து ஊடகங்களில் மட்டுமே சிறப்பாக விளக்கக் கூடிய காட்சிகளை அதை விட சிறப்பாக விளக்கியிருக்கிறார்கள் டாடா கிராபிக்ஸ்.  குறிப்பாக 3 x 9 = 3 போடும் தர்ஷீலின் கற்பனா சினிமா.

அடிதடியாக கஜினியை தருவார் என எல்லோரும் எதிர்பார்த்திருக்க உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் அமீர்கான்.  சிறுவர்களுக்கான உலகத்தை சிறப்பாக காட்டுவதில் ஈரானிய படங்கள் தான் பிரசித்தம். அந்த வகையில் இந்தியாவிற்கான வெகுஜன சினிமா கணக்கை ஆரம்பித்து வைத்திருக்கிறார் அமீர்.  (“மல்லி போன்ற டாக்குமென்டரிகளை  நம்மில் எத்தனை பேர் பார்த்திருப்போம்.) எந்த கமர்ஷியல் ரெசிபியும் இல்லாமல்  ஆடியன்ஸை உணர்வோடு அணுக வைத்து அச்சிறுவனது உலகத்திற்க்கு நம்மை கூட்டிச் சென்று அவனது சுக துக்கங்களில் பங்கெடுக்க வைத்து அட! போங்களய்யா!  இதை விட சிறப்பாக ஒரு படத்தை உங்களாலும் சரி மற்றவர்களாலும் சரி தர முடியாது.

முன்பாதியில் நம்மை அழைத்து சென்று சிரிக்க வைத்து பின் பாதியில் உருக வைக்கிறான் அமீர்கான் என்ற ஸ்வீட் அரக்கன். எப்படா முடியும் என்ற சினிமாக்களையே பார்த்து அலுத்து போன நமக்கு படம் முடிந்து விடக்கூடாதே என்ற பதட்டம் பற்றிக் கொள்கிறது.  இவ்வளவுக்கும் நமக்கு ஹிந்தி தெரியாது நண்பர்களே!?!?!

டீயுஷன், பாட்டு வகுப்பு, கம்பயூட்டர் வகுப்பு, கராத்தே, ஹிந்தி வகுப்பு என்ற டைட்டான உங்கள் செல்வங்களின் ஒரு நாள் ஷெட்யூலை பங்கடித்து விட்டு ஒரு தடவை போய் வாருங்கள்.  உங்கள் செல்ல செல்போன்களையும் அணைத்து விடுங்கள்.

சில படங்கள் பார்க்கும் போது சந்தோஷமோ; கோபமோ; எரிச்சலோ; ஏன் சில நேரங்களில் கண்ணீரோ வருவதுண்டு.  ஆனால் விமர்சனம் எழுதும் போது அவ்வளவு டிஸ்டர்ப்டாக இருப்பதில்லை. ஆனால் எழுதும் போதும் கண்ணீரை வர வழைத்த உண்மையான சினிமா இது.  தாரே ஜமீன் பர் என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டேன்,

வானத்து விண்மீன்கள் பூமியில் என்றார்கள்; நிஜமாக tare4.png

பிரிவோம் சந்திப்போம் – விமர்சனம் ஜனவரி 29, 2008

Posted by M Sheik Uduman Ali in Reviews.
Tags: , , ,
1 comment so far

சுற்றிலும் கற்றாழை, அவரைச் செடிகள் சூழ்ந்த கிராமத்து தார்ச் சாலையில் மருதை மர நிழலில் மெதுவாக சைக்கிளில் பயணிப்பது போலொரு சுகானுபவம் பிரிவோம் சந்திப்போம்.

பாட்டி, தாத்தா, நாத்தனார், மாமியார் என சுக துக்கங்களை பங்கு போடும் கூட்டுக் குடும்ப சூழலை விரும்பும் மனைவி; தனிமையான இல்லறத்தை விரும்பும் கணவன். இவர்களுக்கிடையேயான தாம்பத்யச் சதுரங்கத்தை ஆர்பாட்டமில்லாமல் அழகாக சொல்லியிருக்கிறார்கள்.

சாமன்ய சம்சாரி, பொறுப்பான அதிகாரி என சேரனுக்கு ஏற்ற ஆனால் எல்லோர் மனதிலும் பதிந்த அரிதாரம். அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். வேலைக்கு போய் வந்ததும் அக்கடாவென உட்கார்ந்து டிவி பார்ப்பவரிடம் சினேகா பேசிக்கொண்டிருக்க அதை வேண்டா வெறுப்பாக கேட்டுக்கொண்டிருப்பார்; மனைவிக்கு என்னவோ ஏதோ என பதறி ஒன்றுமே சொல்லாமல் மானிட்டர் பண்ணும் நர்சிடம் சண்டை போடுவார். இப்படியாக மாறிவரும் குடும்ப சூழலில் உள்ள ஒரு யதார்த்தமான கணவனாக நடித்திருக்கிறார் இந்த கதை நாயகன்.

ஆற அமர உட்கார்ந்து எந்தவொரு குறுக்கீடுகளும் இல்லாமல் சினேகா நடிப்பதற்கேற்ற இல்லாள் பாத்திரம். என்னை விட்டால் ஆளில்லை என நடித்திருக்கிறார். குடும்பத்தினர் ஒவ்வொருவரின் குணாதிசயங்களை கண்டு சிலாகிக்கிறார்; தனிமை நோய் கொஞ்சம் கொஞ்சமாக அவரை ஆட்கொள்வதை பூக்கள் வெடிப்பதை போல மிருதுவாக காட்டுகிறார். இப்படியாக கூட்டுக்குடும்பத்திற்கு ஏங்கும் தற்கால பெண்களுக்கு முரணான பாத்திரத்தில் ஜொலிக்கிறார் சினேகா. சொந்தக் குரலா அம்மணி?

pirivom.png
இவர்களை தவிர இன்னும் இரண்டு டஜன் பாத்திரங்கள். சிறப்பு என்னவென்றால் எல்லோரும் நம் மனதில் பதிந்து விடுவதான். டைட்டில் போடும் போதே ஒரு பேமிலி ஹையரார்கியல் சார்ட் போட்டு அசத்துகிறார்கள். மெளலிக்கு கன கச்சிதமான பாத்திரம்; அதை விட சேரனின் பெரியப்பாவாக வருபவர், தேவதர்ஷினி, சினேகாவின் அப்பா, சேரனின் தங்கை என நீளமான யதார்த்தப் படைப்புகள். எல்லோரையும் கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் தன் நடிப்பால் ஓரங்கட்டி விடுகிறார் சேரனின் பாட்டி. எல்லாவிதமான பாட்டி கேரக்டர்களும் இவருக்கு பொருந்திவிடுகின்றது.

பின்பாதியில் வரும் ஜெயராம் கலகலப்பாக வந்து போகிறார். நகரில் ஒரு கிளினிக் வைத்து கை நிறைய காசு பார்க்க ஆசைப்படாமல் அந்த மலைக்காட்டில் எல்லோருடனும் ஆசாபாசமாக பழகி மருத்துவம் பார்க்கும் நல்ல மனிதராக காட்சிகளை நிரப்பியிருக்கிறார்.

காரைக்குடி செட்டியார்களின் கல்யாணத்தை கண்முன் காட்டும் அப்பாடல் காட்சி ஒன்றே போதும் ராஜீவனின் கலையம்சத்திற்கு. யதார்த்தத்தை எங்கேயும் தவற விடாத அளவிற்கு அவ்வளவு அழகாக படத்தொகுப்பு செய்திருக்கிறார் சரவணா.

முன்பாதியில் காரைக்குடியின் பிரும்மாண்ட வீடும் கல்யாணமும்; பின்பாதியில் தேயிலைச்செடிகளை போர்த்தி குளிர்காயும் அட்டகட்டி என வரப்பிரசாதமாக கிடைத்ததால் பெரிதாக மெனெக்கடாமல் தன் காமிராவால் கொள்ளையடிக்கிறார் M.S.பிரபு.

அதிரடிதான் இவரின் ஸ்பெஷல் என்றாலும் வலிக்காத வாத்தியங்களில் வாஞ்சையாக திரைக்கதையை தடவி விட்டிருக்கிறார் வித்யாசாகர். சில சந்திப்பிழைகள் இருந்தாலும் சபாஷ். மனதில் பதியாவிட்டாலும் திரைக்கதையை நகர்த்த உதவும் சீரான பாடல்கள்.

மென்மையாக சொல்ல வேண்டும்; உருக வைக்க வேண்டுமென எந்தவொரு தோரணமும் கட்டாமல் நேரடியாக கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் கரு. பழனியப்பன். குழந்தை மூச்சடைந்து இருப்பது; உங்க மனைவிக்கு மன நோய் என இவைதான் படத்தின் உச்சமான அதிரடிக்காட்சிகள். இப்போ என்னவாகுமோ, யார் எந்த குண்டை தூக்கி போடப்போகிறார்களோ என எந்தவொரு பதட்டமுமில்லாமல் பார்க்கலாம். பெரிதான நிகழ்வுகள் கூட அன்றாட வாழ்க்கையில் இழையோடி தரும் அதிர்வை கச்சிதமாக பிடித்து விசுவல் மீடியத்தை நோயுற்றதாக்கமால் நகர்த்திச் சென்றிருக்கிறார்.

சொல்ல வந்த கருத்தை கூட்டுக்குடும்பமா தனிக்குடும்பமா என சராசரி பட்டிமன்றமாக்காமல் பிழைக்க நெடுந்தொலைவு குடும்பத்தை விட்டு வந்து ஒண்டிக்குடுத்தனத்தில் டிவியாலும் சூழல்களாலும் எந்திரமயமாகி போன இல்லறத்தை அங்கிங்கு சுற்றாமல் நேர்கோட்டில் சொல்லியதற்கு சபாஷ் பழனியப்பன். அதை விட காரைக்குடி மக்களின் அசலான வாழ்க்கை முறைகளை வட்டார மொழி கலந்து சொன்ன விதம் அருமை.

நோய்க்கான மருந்தை மருத்துவர்களை அணுகாமலேயே வாங்கி சாப்பிடும் கலாச்சாரத்தை திருக்குறள் கலந்து ஜெயராம் சொல்லும் காட்சி உட்பட நோகடிக்காத வசனங்கள்.

கூட்டுக் குடும்பத்திலேயே இருந்ததினால் தனிமைக்கு சேரன் ஏங்கினாலும்; அவர்களை பற்றியே நினைக்காத அளவிற்கு சேரன் நடந்து கொள்ளுவது அவர் பாத்திரத்திற்கு முரணான ஒன்றாக தோன்றுகிறது.

கண்ணைக் கட்டி சாமி ரூமிற்கு கூட்டிச் சென்று குடும்பத்தினர் முன்னிலையில் முத்தமிடும் சேரன்; ஆபிஸில் அனைவரும் பிக்னிக் செல்ல சேரன் இப்படி கும்பல் வேண்டாமென்றுதானே இங்கு வந்தேன்; கடவுளுக்கு ஒரு ரூபாய் சேவிங்ஸ் போடும் சினேகாவின் டயலாக், பேங்கில் தான் மானேஜர், வீட்டில் கணவன் என மெளலியின் டயலாக்குகள் என ஆங்காங்கே இலக்கணப் பிழைகளும் உண்டு.

என்ன சொல்ல போகிறார்கள் என்று யோசிக்கும் அளவிற்கு நிதானமெடுத்து செல்லும் பின்பாதி சாம்பார் சாதத்தையே வெரைட்டி ரைஸாக வேகமாக சாப்பிடும் பாஸ்ட் புட் தமிழனை நிறையவே சோதித்து பார்க்கும். நெடுந்தூரத்திற்கு பரப்ப காட்சிகளில்லாமல் துணுக்குகளாக வந்து சேரும் காட்சிகளை எப்படி எடுத்துக் கொள்வது எனத் தெரியாத நம்மாட்கள் படம் எப்படா முடியும் என புலம்புகிறார்கள்.

யதார்த்தமான மெல்லிய உணர்வுகளை படபடவென பாப்கார்னாக சொல்லுவது ஒரு ஸ்டைல். அதையே குளத்தில் காற்றின் தன்மைக்கேற்ப பயணிக்கும் காகிதக் கப்பலாய் அதன் வளைவு நெளிவுகளில் பயணிக்கச் செய்வது ஒரு ஸ்டைல்.

வேகமான வாழ்க்கை முறையில் நிதானமாக அதை ரசிக்க நீங்கள் ரசிக்க தயார் என்றால் இலக்கண மற்றும் சந்திப்பிழைகள் இருந்தாலும்

பிரிவோம் சந்திப்போம் – அழகிய வெண்பா.

பீமா – விமர்சனம் ஜனவரி 17, 2008

Posted by M Sheik Uduman Ali in Reviews.
Tags:
add a comment

விக்ரம், பிரகாஷ்ராஜ், ரகுவரன் என பசியோடு நீந்திக் கொண்டிருக்கும் மூன்று நடிப்பு திமிங்கலங்களுக்கு இரை போட வந்திருக்கிறார் லிங்குசாமியின் பீமா.

beema.png

கடந்தாண்டு பிரம்மாண்ட படைப்புகளுக்காக எதிர்பார்க்கப்பட்ட படங்கள் சிவாஜி மற்றும் பில்லா. அந்த வரிசையில் மிச்ச சொச்சமாக வந்திருக்கிறார் பீமா. ஆச்சர்யமான விசயம் இந்த படங்களுக்கிடையேயான ஒரு ஒற்றுமை. நிறைய எதிர்பார்க்க வைத்து ஏமாற்றியது. பில்லாவையாவது பாராட்டலாம் முயற்சித்ததற்காக!

காலம் காலமாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் சொல்லப்படும் கேங்ஸ்டர் டைப் கதைகளில் குறை ஏதுமில்லையென எந்தவொரு புது முயற்சியும் இல்லாமல் கருணையோடு அப்படியே அடியொற்றி சொல்லியிருக்கிறார்கள். டீமை பார்த்து யாரும் தளபதி, புதுப்பேட்டை, காக்க காக்க, வட்டாரம் வரிசையில் யோசித்து குழப்பிக் கொள்ள வேண்டாம். கூட வந்த நண்பர் வேறு மார்டின் ஸ்கோர்செசின் இயக்கிய பிரபலமான குட்ஃபெல்லாஸ் திரைப்படத்தின் சாயலடிப்பதாக கூறினார். (என்னை மாதிரியே விழிக்கிறவர்கள் http://en.wikipedia.org/wiki/Goodfellas தளத்திற்கு விரைக)

சென்னையின் பிரதான இடங்களிலெல்லாம் ஹீரோவும் சரி வில்லனும் சரி சளைக்காமல் டூமீல் டமீல் என டஜன் டஜனாக கொலை செய்கிறார்கள். இவர்களை கேட்கத் தான் யாரும் இல்லை என்றால் த்ரிஷாவும் ஒரு காட்சியில் பிஸ்டலை எடுத்து சுடுகிறார்; கேட்க யாருமில்லை. நமக்கு தெரிந்து இவ்வளவு துணிச்சலாக என்பதுகளில் வந்த தெலுங்கு வில்லன்கள் தான் செய்வார்கள்.

என்ன கொடுமை என்றால் யாரும் யோசிக்க முடியாதபடி படம் நெடுகிலும் வரிசையாக புதுமையான காட்சிகள்(?!). த்ரிஷா மேல் விக்ரம் விழுந்ததும் பிறக்கிறது காதல்; த்ரிஷாவை ராக்கிங் செய்யும் ரோமியோக்களை காக்க காக்க ஸ்டைலில் வந்து அடிக்கும் விக்ரம்; மார்க்கெட் ஏரியாவை இடித்து ஷாப்பிங் மால் கட்ட வரும் ரகுவரன்; அதை தடுக்கும் ஹீரோ & கோ என எந்தவொரு காட்சியையும் நம்மால் முன்னறிந்து கொள்ள முடியாது.

ஆக இப்படியாக முற்றிலும் எதிர்பாராத திருப்பங்களோடும் நிறைய அபத்தங்களோடும் இடைவேளையும் வருகிறது. அதற்கு பின்னும் அதே பஜனையை தொடர்கிறார்கள்.

உடம்பை முறுக்கேற்றி பார்க்கவே பயங்கரமாக திமிறியிருக்கிறார் பீமா என்ற விக்ரம். இன்னும் பயங்கரமாக இருக்கிறது அவரது சண்டை.  குறிப்பாக  அந்த மார்க்கெட் சண்டையில் இவர் அடிப்பதும் பூடகமாக பிரகாஷ்ராஜ் பார்ப்பதும் செம அழகு. செம ஸ்டைல். சமீபமாக இவ்வளவு சிறப்பாக எந்தவொரு படத்திலும் சண்டைக் காட்சிகள் வந்ததில்லை. விக்ரம் அடித்தால் நிஜமாக இருக்கிறது. கனல் கண்ணன் பாராட்டுக்குரியவர்.

படத்தில் ரோமான்ஸ் காட்சிகள் என்ற பெயரில் கடுப்பேற்றுகிறார்கள் அந்த கிளைமாக்ஸிற்கு முந்தைய பாடலை தவிர. ஐந்து பாடல் காட்சிகளோடு த்ரிஷாவை அனுப்பியிருக்கலாம்.  பாவம்!

விக்ரமிற்கு இணையாக கிடைத்த சந்தர்ப்பத்திலெல்லாம் சிக்ஸர் அடித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். இவருக்கான ஸ்கோப்பிலெல்லாம் எந்தவொரு இடைஞ்சலுமில்லாமல் நிற்கும் தைரியம் விக்ரமிற்கு மட்டுமெ உண்டு. ரகுவரன் தான் ரொம்ப பாவம்.

படத்திலேயே விக்ரம், பிரகாஷ்ராஜிற்கு அடுத்தபடியாக அதிகமாக உழைத்திருப்பவர் சினிமாட்டோகிராபி பண்ணியிருக்கும் R.D.ராஜசேகர். சண்டைக் காட்சிகளாகட்டும் பாடல் காட்சிகளாகட்டும் மனிதர் அசத்தியிருக்கிறார். உறுதுணையாக எடிட்டர்  ஆண்டனி.

பாடல்கள்  ஏற்கெனவே ஹிட்டடித்து விட்டன; ஆனால் படமாக்கியதில் “முதல் மழை“, “ஒரு முகமோதவிர மற்றவைகள் சுமார். முப்பத்தெட்டு நாட்கள் உட்கார்ந்து கம்போஸ் செய்த ரீரிக்கார்டிங் மாதிரி தெரியவில்லை ஹாரீஸ்.

ரன், சண்டைகோழி மாதிரி அதிரடியான படங்களை செய்த லிங்குசாமியின் இரண்டு வருட உழைப்பில் வந்த படம் மாதிரி தெரியவில்லை. அதற்கான எந்தெவொரு ஆச்சர்யங்களும் இல்லை. அதிகபட்சம் ஆறுமாதத்தில் எடுத்து முடிக்கக் கூடிய படம். சிவாஜி, பில்லா மாதிரியே திரைக்கதையில் தான் கோட்டை விட்டிருக்கிறார்.

பிரகாஷ்ராஜிற்கும் விக்ரமிற்குமிடையேயான அந்த மின்காந்த அலைகளை எந்தவொரு வசனமும் சொல்லாமல் புரிந்து கொள்கிற மாதிரி வேறு எந்தவொரு காட்சிகளும் மனதை தொட முயற்சிப்பதில்லை.

பிரம்மாண்டம், ஸ்டார் வேல்யூவை நினைத்து நீண்ட கால ஷெட்யூலில் எடுக்கப்பட்ட இந்த மாதிரி சினிமாக்கள் ஸ்டோரிபோர்டில் திட்டமிடப்படாத திரைக்கதையோடு களத்திற்கு வருகின்றனவோ என தோன்றுகின்றது. மிரள வைக்கும் காட்சியமைப்புகளே இருந்தாலும் சமீபத்தில் வந்த காக்க காக்க, புதுப்பேட்டை படங்களில் இருந்த களச் சூழலை வைத்தே மிரட்டும் தொனியோ; தலைநகரம், வட்டாரம் படங்களில் இருந்த கிரைம் ட்ராமாவோ பீமாவில் இல்லை.

ஆனால் மிரள மிரள இழுபட்ட படம் கிளைமாக்ஸில் நம்மை மிரள வைத்து விடுகிறது. மொத்தம் ஐந்து நிமிடமே அந்த காட்சியென்றாலும் லிங்குசாமி அட போட வைக்கிறார். இந்த பரபரப்பும் விறுவிறுப்பும் தொடக்கம் முதல் இருந்திருந்தால் ஆடியன்ஸின் நெத்தி பொட்டில் அடித்திருக்கலாம்.

பீமா – புளித்து போன பழைய இட்லியை உதிர்த்து செய்த உப்புமா